Wednesday, July 14, 2010

பாவிகள்.!

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு சும்மா அறிக்கை விடக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கிறார் சினிமாக்காரி "அசின்."

அது சரி , யாழில் நீங்கள் யாருடன் சென்று தமிழர்களைப் பார்த்தீர்கள்? மகிந்தாவின் மனைவி ஷிராந்தி இராஜபக்சேவுடன்....யார் அவர் , அனுதினமும் நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கூட்டத்துக் காரர்.

உண்மையானதும் , நேர்மையானதுமான அக்கறை தமிழர்கள் மேலிருந்தால் நீங்கள் கண்டித்திருக்க வேண்டியது தமிழர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய இராஜபக்சேவைத்தான் . அதைச் செய்தீர்களா? இல்லையே ? ஊருக்கு நாங்கள் தமிழர்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ள உங்களை உபயோகப்படுத்துகிறார்கள் அவர்கள். 

உங்கள் பிழைப்புக்காக தமிழ்த்திரையுலகத்தை இரண்டுபடுத்தப் பார்க்கிறீர்கள்.......உங்களைச் சொல்லி குற்றமில்லை....வந்தேறிகளையும் , வேற்றினத்தார்களையும் அன்றாடம் தம் ஆதர்ஷ புருஷனாக்கி மகிழும் தமிழர்கள் செய்த தவறு அது....நீங்கள் அயலவர்கள்...உங்களுக்கு எங்கள் கஷ்டமும் , வேதனையும் புரியாது. 

அப்பாவியல்ல அசின் , படுபாவி........முள்ளிவாய்க்காலில் உலாவும் ஆயிரக்கணக்கான தமிழ் ஆத்மாக்கள் உம்மை மன்னிக்காது.....

***

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்பது பற்றி பரிசீலிப்போம் என்று அறிவித்திருக்கிறார் சினிமாக்காரர் திரு. சரத்குமார்.

சந்தியுங்கள்.....நிச்சயம் செய்ய வேண்டியதே........வேதனையில் உழலும் அவர்களுக்கான மருந்தாக இது கட்டாயம் செய்யப்பட வேண்டியது......அன்றாடம் கொத்துக்குண்டுகளுக்கிடையில் வாழ்ந்த நம் சனத்துக்கு ஆறுதல் தேவைதான்.

ஆனால் எப்போது இப்படிச் சொல்கிறீர்கள்? சினிமாக்காரர் திரு.கருணாநிதியைச் சந்தித்து வந்த பிறகு....கூடவே இன்னொன்றையும் சொல்கிறீர்கள் "இன்று என் பிறந்த நாள்...வாழ்த்துக்கள் வாங்கவே வந்தேன்...அதனால் அரசியல் பேச முடியாது என்று.." 

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்போம் என்று இன்று சொல்வது அரசியல் இல்லையா? அதுவும் யாரைச் சந்தித்து விட்டு வந்த பிற்கு ? கலைஞரைச் சந்தித்து விட்டு வந்தபோது....அடக்குமுறையின் மூலம் இராஜபக்சேவை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கருணாநிதியைச் சந்தித்து விட்டு வந்த பிறகு...ஆக , உங்களின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி என்னவென்று மக்களுக்குப் புரியாதா என்ன?

இராஜதந்திரி , இனவுணர்வாளர்களின் குரலை நசுக்கவே உங்களைப் பயன்படுத்துகிறார்....ஏற்கனவே , எம்.பிக்களின் குழுவை அனுப்பினார் அவர்...அதற்கு "யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரன் " என்று தலையகம் தீட்டியது வலம்புரி நாளிதழ்...என்ன பதில் ? பதிலேதும் இல்லை...

ஆனால் , நான்கே நாளில் ஈழத்தமிழர்களூக்கு விடுதலை பெற்றுத்தந்ததாக போஸ்டர் ஒட்டி மகிழ்ந்தார்கள் உடன்பிறப்புகள்........இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் வாடுகிறார்கள்...கண்டித்து ஏதேனும் அறிக்கை விட்டாரா உங்கள் தற்போதைய "அப்பா?" . இல்லை போஸ்டர்தான் ஒட்டினார்களா உடன்பிறப்புக்கள்...?

***

உத்தபுரத்தில் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்கிறார்களாம்....மார்க்சிஸ்டுகள் தான் அமைதியைக் கெடுக்கிறார்களாம்....கருணாநிதி சொல்கிறார்.

கலைஞர் கருணாநிதி எவ்வழி வந்தவர்? 

பெரியாரின் வழி

கலைஞரின் இயக்கம் திமுக எவ்வழி வந்தது?  

சுயமரியாதையை, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு


தீண்டாமைக் கொடுமையினை அனுதினமும் எதிர்த்த பெரியாரின் வழித்தோன்றல்கள் தான் "உத்தபுரத்தில்" அமைதி கூத்தாடுகிறது என்கிறார்கள்..

வைக்கத்திலும் அமைதி கூத்தாடிக்கொண்டிருந்தது. பிறகேன் வைக்கம் வீரர் என்று பெரியாரைப் புகழ்கிறீர்கள்???

கோயில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் சேவையில் அமைதியாகத்தான் இருக்கிறது..பிறகேன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றுகிறீர்கள்?

போலிஸை வைத்து அடக்குமுறையைக் கையாண்ட சர்வாதிகாரிகள் ஒருவனாவது புகழப்படுகிறானா என்று பாருங்கள் கலைஞரே...

ஸ்டாலினில் , ஹிட்லரில் ஆரம்பித்து இந்திராகாந்தி வரை வரலாற்றில் தூற்றப்படுகிறார்கள்....

தமது ஆட்சிக்காக எவ்வளவு தூரம் கீழிறங்கிப் போயிற்று இந்த திமு கழகம் என்ற வேதனை தொண்டையை அடைக்கிறது.

மொழியை வைத்து வயிறு வளர்த்த கூட்டமொன்று , எமக்கு இனவுணர்வை ஊட்டி வளர்த்த கூட்டமொன்று , இன்று ஊரைக் கொள்ளையடிக்க ஊமையனாய் நீ இருந்துகொள் என்று சொன்னால் நாம் சும்மா இருந்துவிடுவோம் என்று கனவு கண்டது.. காண்கிறது....அது பகல் கனவு....பலிக்காது பாவிகளே..!

No comments: