Sunday, April 18, 2010

நேர்மையும் , வாய்மையும் அற்ற நிலைகெட்ட மனிதர்கள்.!

பிரபாகரனின் தாயார் அவர்களை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த விடயத்தில் இந்தியாவின் நாணயம் இன்னுமொருமுறை பல்லிளித்தை அனைவரும் அறிவோம். !

அஃதோடு சேர்ந்து இன்னமும் வெகுபலரின் நாணயமும் , நேர்மையும் , வாய்மையும் பல்லிளித்ததை அறிவீரோ? 

தெரிந்த செய்திதான்...அணுகிய கோணம் மட்டுமே வேறு. 

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி , மக்கள் தொலைக்காட்சியின் மூலம் தமிழ்வளர்க்கும் தமிழர் திரு.இராமதாஸ் "தமிழக அரசு " இதைச் செய்திருக்காது என்று கட்டியம் கூறிவிட்டார். உலக தமிழர்களே, இதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்வார்கள் இனி...

அடுத்த அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டாகிவிட்டது. நல்லது , 

இவரது அரசியல் அணுகுமுறைதான் பல்லிளித்து விட்டதெனில் , ஈழத்தாய் புர்ட்ச்சி தலைவி தமது கருத்தைக் கூட கூறுவதற்கு நேரமின்றி கொடநாட்டு அலுவல்கள் கொத்துக்கொத்தாய்க் காத்திருக்கின்றன....விட்டுவிடுவோம் பாவம் - அவரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் நமது தவறே. 

மேட்டுமை தாங்கிய கேப்டன் தனது தொலைக்காட்சியின் முழக்கமாக "தமிழ்....தமிழ்" என்று முழங்கிவிட்டு "கேப்டன் டீவி" என்று அழகுத்தமிழில் பெயர் வைத்துக்கொண்டதைப் பற்றி நமக்கொன்றும் கவலையில்லை. ஆனால் வயதான ஒரு மூதாட்டியை / தமிழச்சியைத் திருப்பியனுப்பியது பற்றி கருத்துக்கூறாமல் விடுவதைப் பற்றி கவலைப்படுவதும் , அது குறித்த அரசியல் பார்வையைப் பற்றி கேள்வி எழுப்புவதும் தவறா என்ன? 

 திருமா அவர்களை விட்டுவிடுவோம். அவர் ஏதோ தர்மசங்கடத்தில் இருக்கிறார். பிழைப்புக்கு கூவியாக வேண்டும்....அப்புறம் மறந்து விடுவார். 

இதுகாறும் இதுபற்றி வாய்திறக்காததன் மூலம் , தமிழக அரசுதான் இக்காரியத்திற்கு மூல கர்த்தா என்று சொல்லாமல் சொல்லியாகிவிட்டது..

அடுத்து மிக முக்கிய தலைப்பிற்கு வருவோம்.

புலிகளின் தலைவரின் தாயார் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதை சிதம்ப்ர ரகசியமாக வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை வைகோவிற்கோ அல்லது நெடுமாறனுக்கோ எங்கிருந்து வந்தது என்பது கூர்ந்து நோக்கவேண்டிய கேள்வி..
அதற்கான பதிலாக அவர்களால் சொல்லப்படுவது " தாயாரின் பாதுகாப்பு...." 

இது சற்றும் சரியானதாகப் படவில்லை. வெகுபலருக்குச் சொல்வதன் மூலம் , அத்தாயாருக்கான ஆதரவு அதிகப்பட்டிருக்குமே ஒழிய , பாதுகாப்பு வலுப்பட்டிருக்குமே ஒழிய எவ்விதத்திலும் அதற்கு குறையிருக்காது.

ஏற்கெனவே , முத்துக்குமாரின் மரணத்தை , அதன் பின்னரான எழுச்சியை வீண்டித்த வைகோவும் , நெடுமாறனும் , திருமாவும் இப்பிரச்சினைக்கும் தக்கதொரு காரணத்தைக் கூறி அல்லது தெருமுக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தத்தமது கடமைகளை முடித்துக்கொள்வர்.

அத்தோடு நாமும் மறந்துவிடுவோம்.


சரி , தமிழகத்தை விடுங்கள்...

புலம்பெயர் தமிழீழ மக்களிடையே ஏதேனும் வலுவான எதிர்ப்புக்குரல் எழும்பியதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் , உலகத்தமிழர் பேரவை எனப்படும் குளோபல் தமிழ் போரம் , நாடுகடந்த தமிழீழ அரசு இப்படி ஏதேனும் ஒரு சில அமைப்புகளாவது இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தார்களா எனில் அதுவும் இல்லை.....ஏன் என்று ஆராயப்போனால் , எமது அறிவுக்குதந்த காரணமொன்றும் தென்படவில்லை.

ஏதோ சில பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஊடகங்களில் எழுதுவதோடு அவர்களின் எதிர்ப்புக்குரலும் அடங்கிவிடுகிறது....

சரி , தாயக ஈழத்தமிழர்கள்?? முகாமிற்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை விட்டுவிட்டாலும் கூட நமது பார்வை "தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை" நோக்கி நீள்வதில் தவறிருக்கவியலாது... குறைந்த பட்சம் இந்தியா தம் முடிவை மீள் பரிசீலனை செய்யவேண்டும்" என்ற அளவிற்காவது வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை...!

எல்லோருக்கும் பயம் , இந்தியாவைக் கண்டு பயம்.....இந்தியாவை எதிர்க்கக் கூடாது , அதனால் தமது சொந்த நலனுக்கோ இல்லை புகலிட நலனுக்கோ பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பயம்...! 

ஆனால் எல்லோருக்கும் தமிழீழம் மேல் ஆசை , அதில் வாழ ஆசை...அதைப் பெற்றுக்கொள்ள ஆசை.....ஆனால் நமக்கு யாரேனும் வந்து பெற்றுத்தர வேண்டும்..........

இப்படிப்பட்ட ஒரு சுயநலச் சமூகத்திலிருந்துதான் அர்ப்பணிப்புள்ள 50 ஆயிரம் வீரர்களை உருவாக்கினார் தேசியத் தலைவர் பிரபாகரன்...........அதற்காக அவர் பட்ட கஷ்டமும் , தியாகமும் , உழைப்பும் இப்படி அணியணியாகப் பிறந்து கிடக்கும் தமிழர்களால் வீணடிக்கப்படுகின்றது..

நேர்மையும் , வாய்மையும் , உண்மையும் அற்ற சுயநல மனிதர்களால் இங்கே போராளிகளின் தியாகம் கானல் நீராகிப்போனது.

அத்தியாகம் மதிக்கப்பட வேண்டுமானால் , இளைஞர்களே , மாணவர்களே , நம்மால் மட்டுமே முடியும்...அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி விட்டு நாமே முன் நிற்க வேண்டும்.....நாமே இனி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.......... அதுவே ஒரே வழி.

Friday, April 16, 2010

தமிழனுக்கு இதைவிட அவமானம் இனியேது?

ஆம்.

இதைவிட அவமானம் இனியொன்றுமில்லை. இதற்குப்பின் பொறுத்திருப்பின் இனி தமிழன் மானங்கெட்டுச் சாவதிலும் தவறில்லை..!!!

தேசியத் தலைவரின் தாயார் என்ற முறையில் அல்ல , தமிழச்சி என்ற முறையில் அல்ல , பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாய் திரிகிற ஒரு வயதான மூதாட்டியை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது இந்தியா.

தொடர்புபட்ட செய்திகள்....




இதற்கு மன்னிப்பே கிடையாது...மன்னிக்கவும் முடியாது....!!!! 

ஏன்?

இந்தியாவின் எதிரி நாட்டின் மட்டைப்பந்து விளையாட்டு வீரர் வாசிம் அகரமின் மனைவிக்கு வைத்தியம் பார்க்க விசா ஏதும் இல்லாமலே சென்னையில் இறங்க அனுமதித்த இந்திய அரசு , தகுந்த காரணம் எதுவுமின்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது என்றால் என்ன அர்த்தம்..?

தமிழ்நாட்டுத் தமிழனே , நீ சொரணை கெட்டவன்..
பிரியாணிக்கும் , நூறு ரூபாய் பணத்துக்கும் விலை போனவன்.....
 உன்னால் ஒரு "மசுரும்" புடுங்க முடியாது என்று சொல்வதாகத்தானே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது????????????

செம்மொழி மாநாடு கூட்டும் நம்ம தாத்தா என்ன சொல்லப்போகிறார்.? மனிதாபிமானம் சிறிதுமற்ற இந்தச் செயலைக் கூட காங்கிரஸ் கூட்டணிக்காக கண்டிக்காமல் விடப்போகிறாரா?

அய்யா , அரசியல்வியாதிகளே...

கொஞ்சமேனும் மனசாட்சியுடன் இருப்பீர்களானால் கட்சி வேறுபாடின்றி இந்த ஈனச்செயலை , தமிழ்நாட்டுக்கு தீராத அவமானத்தையும் , பழியையும் ஏற்படுத்திய இந்த வேதனைச் செயலை கண்டித்தே ஆகவேண்டும்..!

இந்தியாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றால் என்ன எழவுக்கய்யா , விசா தருகிறீர்கள்???

ஏனய்யா அவர்களைச் சென்னை வரை வரவிட்டு திருப்பி அனுப்புகிறீர்கள்???

மானங்கெட்ட , சொரணை கெட்ட தமிழர்களைச் சீண்டிப்பார்க்கவா???

ஊடகதர்மங்களைக் கடைப்பிடிக்கும் வணிக நோக்குள்ள பார்ப்பனீய ஊடகங்களின் நிலைமையும் என்ன?நான் சொல்லும் பார்ப்பனீய ஊடகங்களில் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அடக்கமே...!!!

வழக்கம் போலவே , இருட்டடிப்பு செய்யப் போகின்றனவா????


கேள்விகள் நிறைய உண்டு......ஆனால் பதில் யாரிடம்?

Saturday, April 03, 2010

தமிழில் பொறியியல் கல்வி : வாழ்த்துவோம்..!

அகம் , புறம் அனைத்திலும் , ஒரு மனிதனின் சிந்தனை முழுக்கவும் நிரம்பியிருப்பது தாய்மொழி. அது ஆங்கிலம் ஆனாலும் , பிரெஞ்ச் ஆனாலும் , தெலுங்கு ஆனாலும் , தமிழ் ஆனாலும் ஒரு மனிதன் சிறு வயது முதல் சிந்திக்க ஆரம்பிக்கும் பருவம் வரையும் ஒவ்வொன்றையும் தனது தாய் புகட்டிய மொழி மூலமாகவே கற்கிறான்.

சிந்தனை ஊறுவதும் , செழிப்புற வாழ்வதும் ஒரு விடயத்தை எவ்வாறு அவன் கிரகித்துக்கொள்கிறான் அல்லது புரிந்து கொள்கிறான் என்பதை ஒட்டியுமே ஆகும்!

அப்படி புரிந்து கொள்வதற்கு , சரியான முறையிலான கல்வி அவசியமும் , அடிப்படையும் ஆகும். ஆனால் தமிழ்த் தேசத்தில்  , பத்தாவது , பனிரெண்டாவது வரை எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்கும் ஒருவன் கல்லூரி சென்றதும் ஆங்கில வழியிலேயே கல்வி கற்கும் விநோதமான , வேடிக்கையான , நகைப்புக்குரிய செயல் நிகழ்கிறது. அதற்கு கூறப்படும் காரணமோ அதைவிட நகைப்புக்குரியது. உலகளாவிய முறையில் ஆங்கிலம் தான் சிறந்தது என்ற குருட்டுத்தனமான , பிற்போக்கான நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை.

உலகில் சிறந்த சாதனைகளைப் படைத்து வரும் ஜப்பானியர்களும் , ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , தத்தமது தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள். அவர்கள் சாதிக்கின்ற போது தமிழர்கள் மட்டும் சாதிக்கவியலாது , போட்டியில் முன்னேறவியலாது என்ற நம்பிக்கையை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று நான் விளிப்பது சரிதானே நண்பர்களே?

அடுத்து ஆங்கிலமே உலக மூலம் என்ற கருத்தும் மிகத் தவறானது. உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சீனாவாகட்டும் , லத்தீன் அமெரிக்காவாகட்டும் , ஐரோப்பாவாகட்டும் ஆங்கிலத்தை ஒரு வணிக மொழியாகக் கூட அவர்கள் கையாள்வதில்லை.


இத்தகைய சூழலில் தான் நாகர்கோவில் அண்ணா பல்கலையில் இயந்திரவியல் படிப்பும் , கட்டிடவியல் படிப்பும் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழில் கற்பிக்கப்படும் என்ற தேனான அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. இதைவிட இனிப்பான சேதியொன்று சமீப காலத்தில் இருக்க முடியுமா? நாம் பேசுகின்ற மொழியில் , நாம் புரிந்து கொள்கின்ற மொழியில் கல்வியைக் கற்பதன் மூலமே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என்ற பாரிய உண்மை வெளிப்படப் போகிற வேளையிது.

இதன் மூலம் தமிழில் டெக்னிக்கல் புக்ஸ் என்கின்ற தொழில்நுட்ப நூல்கள் பெருகும் , அங்கு கல்வி கற்கின்ற மாணாக்கர்களின் அறிவுத்திறன் பெருகும். அந்த முயற்சிக்கான ஆதரவை வழங்க வேண்டியது தமிழ்ப்பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சர்வ நிச்சயமாக அந்த முயற்சி தமிழகம் முழுமைக்கும் பரவும்.....

இனி தமிழகம் செழிக்கும் .........கண்டுபிடிப்புக்களில் தலை நிமிரும் ....விரைவில் !