Monday, December 05, 2011

அந்நிய முதலீடும்…அழிந்துபோகும் விவசாயமும்!


 அலங்கியம் அருகிருக்கும் வானம் பார்த்த கிணறு இருக்கும் ஒரு சின்ன ஊர் பெருமாவலசு….உழவோட்டி உழவோட்டியே திமில் தேய்ந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேப்பமர நிழலில் சாய்ந்திருந்தார் ராமசாமி…..காலமெல்லாம் உழைத்து உழைத்து தேய்ந்த கால்களில் செருப்புக் கூட போடுவதில்லை அவர்…

மேடென்பதால் ஓட்ட முடியாத மக்காச்சோளத்தட்டு வைத்துக்கட்டிய சைக்கிளை மூச்சிறைக்க தள்ளிக்கொண்டே வந்தார் பழனியப்பன்…..

‘ ஏம் பழனீப்பா, செத்த வெய்யச்சாஞ்சதுக்கப்புறந்தான் மேவெடுக்கறது….உச்சி வெய்யில்ல இப்பிடி கஷ்டப்படாட்டி என்னப்பா? ‘ என்றார் ராமசாமி…

‘ இல்லீங்கப்புச்சி , மேவெறக்கிப்போட்டுட்டு மறுக்கா ஒருக்கா வரோணுமுங்க………ஊட்டுக்கு போயி ஒருவா கஞ்சி குடுச்சுட்டு வந்து தட்டு வெட்டுணும்னா பொழுது சாஞ்சுரும்…’  காரணத்தை விளக்கினார் பழனியப்பன்…

‘ தட்டு நீயா வெட்டற?ஆள் போட்டு வெட்டற பன்னயமல்லய்யா உன்னுது? ‘

‘இதென்னமோ தெரியாத மாரியே கேக்குறீங்கப்புச்சி..இன்னிக்கெல்லாம் ஆளெங்க கெடைக்குது…ஆறுமணியாப்புல வந்தா ரெண்டு மணியப்புல கெள்ம்பிர்றாங்க…இதுல டீக்குடிக்க , சோறுங்கன்ணு ஆளு வச்சி வேல வாங்கறாப்பலயா இருக்கு? ‘

‘அதுஞ்செரித்தான்…இந்த காட்டுக்குள்ள அருகம்புல்லு மம்மேனியா வளர்ந்து கெடக்கே…இந்த செல்வனக்க்கூப்புட்டு அகந்து புடலாம்னு காலைல ஊட்டுக்குப் போனா , ‘ சாமி , நான் வரலீங்க…..அங்க வந்து நாள் பூராம் கஷ்டப்படறதுக்கு  ,குட்ட வேலைக்கு போனா சுளுவா இருக்குமுங்கோன்றான்…

‘இந்தக் குட்ட வேலை ( கிராமப்புற  வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்) வந்தாலும்வந்துச்சி தக்காளி பொறிக்ககூட ஆளுக்கெடைக்கலை….நேத்து இருந்து பொறிச்சி இருவத்தாறு பொட்டி ஆச்சி…போன வாரம் பொட்டி அருவதுக்கு போச்சி……..இந்த வாரம் இருவதுக்கு கூட எடுக்க ஆளில்லை..’

‘ ஆமாம்ப்பா பழனீப்பா , ஆனா கடைல எல்லாம் கிலோ பத்து பதினைஞ்சுக்குத்தான் விக்குறான்….நம்மகிட்டதான் அடிமாட்டு விலைக்கு வாங்கறான் இந்த வேவாரி…”
‘அது நெசந்தேன் அப்புச்சி…என்றகிட்டயே இருவதுக்கு பொட்டி வாங்கி அப்புடியே அம்பதுக்கு கைமாத்தறான் வேவாரி……புரோக்கருக்கு கமிசன் வேற…….கடசீலே கைல மிஞ்சுறது வெறும் கூலிக்காசு கூட இல்லை…இந்த வெவசாயம் பாக்குறதுக்கு வெறெதாச்சும் பண்ணலாம் போல’.

இது கற்பனை உரையாடல்தான்.. கற்பனை பழனியப்பனும் , ராமசாமியும்தான்…. ஆனால் , இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் அனேக இடங்களில் நிகழ்பவையே…விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்களின் அட்டூழியம் என்பது காலங்காலமாகவே நிகழ்கிறது……கடைநிலை சில்லறை வியாபாரிகளுக்கோ அந்த லாபத்தின் பெரும்பங்கு கிடைப்பதில்லை…இடையிலிருக்கும் பணமுதலைகளான இடைத்தரகர்களுக்கே பெரும்பாலான லாபத்தின் பங்கு செல்கிறது….

நாட்பட்ட நாட்பட்ட இந்திய விவசாயம் லாபமற்ற தொழிலாய் தவிக்கிறது……இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இந்திய விவசாயம் அழிந்துபோகும்…இந்திய விவசாயத்திறக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்துப்படவேண்டியது அவசியம்…இல்லாவிடில் , நாளை உணவினை இறக்குமதி செய்யும் அவலநிலைக்கு ஆளாவோம்…
.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார்? இத்தகைய இடைத்தரகர்கள் தான்……இவர்கள் சில்லறை வணிகர்கள்  முடங்குவார்கள் என்று ஒன்றும் கவலைப்படவில்லை….தமது பிழைப்பு போய்விடுமோ என்றே கவலைப்படுகிறார்கள்…
விவசாயிகளே நேரடியாக தமது பொருட்களை விற்றுக்கொள்ளும் நிலையினை என்றுமே இவர்கள் விரும்பப்போவதில்லை….சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் வடிகட்டிய பொய்…..வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன…இதுபோல சில்லறை வணிகங்களும் இருக்கின்றன….

எவ்வித படிநிலையுமின்றி , கண்காணிப்பும் இன்றி இந்த இடைத்தரகர்கள் போடும் ஆட்டத்தினை ஒரு முறைப்படுத்த உதவும் அந்நிய முதலீடுகளை வரவேற்பதே சமுகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்………..அதன் மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை குறைக்கப்படும்.!

ஆக ,  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்..

இந்திய பொருட்களை அந்நிய தேசத்தில் விற்பதுவும் , இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை தருவதும் , வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர்களும் நமக்குத்தேவையெனில் , அந்நிய முதலீடுகளை எதிர்க்கும் நமது கொள்கை முற்றிலும் நியாயமற்றது…

ஒட்டுமொத்த முதலாளித்துவ கொள்கையினை எதிர்ப்புக்கொள்கையை எதிர்ப்பதில் நியாயம் உண்டு…அதற்கான காரணங்களும்  நிறையவே உண்டு...ஆனால் , எதிர்ப்பாளர்கள்  முன்வைக்கும் மாற்று என்ன? சீனா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சமூகமா? இல்லை வெனிசூலா போன்ற கம்யூனிச முதலாளித்துவமா? இல்லை க்யூபா போன்ற செயலிழந்துபோன , மக்களுக்குப் பயனற்ற கம்யூனிசமா?

தெளிந்து எதிர்த்தால் , தெளிவான பார்வையிருப்பின் அப்போது வேண்டுமானால் முதலாளித்துவத்தை எதிர்க்கலாம்…அதுவரை நீங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது…நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.!!

Monday, November 14, 2011

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தெளிவான பார்வை!

நாம் நிறைய நிறைய ஈழ இணையப் பத்திரிக்கைகளை படிக்கிறோம்...சில கட்டுரையாளர்களின் கட்டுரைகளே எம்மைக் கவர்கின்றன......பல கட்டுரைகள் மிகவும் அமெச்சூர் தனமாக இருக்கின்றன....ஒரு இணைய பத்திரிக்கைகளே கூட மிகவும் அமெச்சூர் தனமாக , அடிப்படைகளேதுமின்றி இருக்கையில் ' சில நாள் முன்பு படித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்டுரை மிகவும் தெளிவான பார்வையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.....

உங்கள் பார்வைக்கு...இதுபோன்ற சிந்தனையாளர்களே தமிழர்களுக்கு உடனடித் தேவை...உணர்ச்சிக்கொந்தளிப்பில் எதையோ பேசி மக்களைக் குழப்பும் வைகோவோ , சீமானோ அல்ல..

பகுதி 1 : 

இன்றைய சர்வதேச அரசியல்:


தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளைச் செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: கட்டுரை

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது. சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில், இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பமானது இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டியது. இதனையே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது. இச் சம்பவங்களை ஏன் தற்போது நினைவுகொள்கின்றோமெனின் அன்று எவ்வாறு தமிழ் மக்களது போராட்டத்தை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்கள் கனிந்திருந்ததோ, அதேபோன்று இன்றைய பூகோள அரசியல் சூழலானது ஒருவகையில் தமிழர்களுக்கு வாய்ப்பான அரசியல் சூழலாக கனிந்துள்ளது என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த வகையில் நோக்கினால், சர்வதேசம் பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பூகோள அரசியல் இலாப நட்டக்கணக்கில் அன்றைய சூழ்நிலையில் அதுவே தமது நலன்களுக்கு உகந்தது என அவர்கள் கணக்கிட்டமையே ஆகும். அதுவே போராட்டம் அழிக்கப்படக் காரணமாயிற்று. புலிகள் அமைப்பானது தேர்தல் அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவும் வேறு தரப்புக்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையினாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனநாயகத்திற்கு மாறானது என சர்வதேசம் வியாக்கியானப்படுத்திய அதேவேளை மக்கள் இப் போராட்டத்தின் பின்னால் நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தினையும் சர்வதேசம் நிராகரித்தே தனது முடிவுகளை எடுத்திருந்தது.

இதனை வேறுவிதமாக கூறுவதாயின்இ நாங்கள் தனித்தேசம் எனவும் எங்களுக்கு என்று தனித்துவமான இறைமை இருக்கின்றது எனவும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான விடயங்களுக்குப் பின் மக்கள் உள்ளனர் என்பதற்கான நியாயங்களை புலிகள் முன்வைத்தபோது, விடுதலைப் புலிகள் நேரடியாகத் தேர்தல்களில் பங்கெடுக்காத அமைப்பு என்பதனை சாட்டாகக் கூறி அவர்களது நியாயங்களை சர்வதேசம் நிராகரித்து விட்டது. இந்த இடத்தில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் போராட்டத்தின் கொள்கையினை சர்வதேசம் நிராகரிக்கவில்லை. எனினும் போராட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறியே போராட்டத்தினை நசுக்க சர்வதேசம் துணை நின்றது.

அடிப்படையில் சர்வதேச நியமங்களின் படி கருத்துச் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் ஓர் அமைப்பின் கொள்கையினை தவறென வெளியுலகு ஓரங்கட்டிவிட முடியாது. எனினும் ஓரு அமைப்பின் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறி அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேசம் கொச்சைப்படுத்தலாம். இதுவே எங்களது போராட்டத்திற்கும் நடந்தது. இது இவ்வாறிருக்க இன்றைய நிலையில் பல கேள்விகள் எம்முன் உள்ளன. அதில்இ மிகப் பலமாக இருந்த போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் தாங்கி நின்ற கொள்கையினை தற்போதைய ஜனநாயக அரசியலுக்குள்ளாக நாம் முன்கொண்டுசெல்ல முடியுமா என்ற நம்பின்கையீனம் பலதரப்புக்களிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே இது பற்றி கவனத்தினைச் செலுத்தவேண்டியுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவுறவேண்டிய விடயங்கள் உள்ளன. அதாவது ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் அரசியலானது முழுக்க முழுக்க ஜனநாயக அரசியலாகவே இருக்கப் போகின்றது. எனவே தேர்தல் வாயிலாக கொள்கைக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பொன்றை பயங்கரவாதம் எனக்கூறி சர்வதேசம் நிராகரிக்கமுடியாது. எனவேதான் சொல்லிலும் செயலிலும் தமிழ்த்தேசியக் கொள்கையினை முன்வைக்கின்ற ஒரு தரப்பிற்கு மக்கள் முழுமையாக வாக்களித்தால் அந்தக் கொள்கை எதுவாக இருந்தாலும் எந்தவொரு தரப்பும் அதனை கொச்சைப்படுத்த முடியாது. காரணம் தேர்தல் வழியாக மக்கள் அங்கீகாரம் இருக்கின்றது குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது என்பதனாலாகும்.

போர் நடைபெற்ற போது நிலவிய அரசியல் சூழல்களைக் காட்டிலும் தமிழ்த் தரப்பு நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலை இன்று உலக அரங்கில் காணப்படுகின்றது. எனவே எம் முன் உள்ள சர்வதேச அரசியல் சூழலை என்னவென நாம் விளங்கிக்கொண்டு பார்ப்போமானால் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழர் தரப்பினை பயங்கரவாதிகள் எனவும் சிங்களத் தரப்பினரை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் எனவும் சர்வதேசம் காட்டிக்கொண்டது. ஆனால்இ இன்றைய சூழலில் நிலைமைகள் மாற்றமடைந்து தமிழ்த் தரப்பானது பாதிக்கப்பட்ட தரப்பாகவும் சிங்களத்தரப்பானது போர்க்குற்றங்களை இழைத்து தமிழர்களின் உரிமைகளை மறுத்துச் செயற்படுகின்ற தரப்பாகவும் சர்வதேசம் ஆராயத்தொடங்கியுள்ளது.

இப்படியாக சர்வதேசத்தில் ஓர் அரசியற் சூழல் மாற்றம் ஏற்பட்டது தமிழ்த் தரப்பிற்கு முதலாவது சாதகமான நிலைமையாகும். அடுத்து இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு இ பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகளை நாம் கூர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இதேவேளை இந்த மூன்று தரப்பு நாடுகளினதும் நகர்வுகளையும் நாம் அவதானிக்கையில் அந் நாடுகள் அவர்கள் சார்ந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவேயுள்ளன. இவ்வாறாக தமது நலன்களை சாதித்துக்கொள்வதில் மூன்று தரப்பு சர்வதேச நாடுகளிடையேயும் போட்டியுள்ள நிலையில் சில விடயங்களில் இம் மூன்று தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் போட்டித் தன்மைக்கு உரிய விடயங்களே அதிகமாகவுள்ளன. இப் போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமது நலன்களை இலக்காகக் கொண்டே இலங்கை அரசினை வழிநடத்துவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளன.

அதேவேளை இம் மூன்று சர்வதேசத் தரப்புக்களும் இலங்கையை சரியாகக் கையாள்வதற்கு பல்வேறு உபாயங்களையும் கருவிகளையும் கையாள்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஒவ்வொரு நாடும் கையாளும் கருவிகளை நோக்குகையில் அதில் வர்த்தகம் மற்றும் நிதி மற்றும் நிதி சாராத உதவிகளை உதாரணப்படுத்திக் கூறமுடியும். எனினும் இவ் இடத்தில் தமது நலன்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக்கொள்வதில் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் நாடுகள் மனித உரிமைகள்இ சட்டத்தின் ஆட்சிஇ ஊடகச் சுதந்திரம்இ ஊழல் அற்ற நிர்வாகம் என்பற்றை ஏற்படுத்துதல் என்ற நீண்ட பட்டியலுக்கு உரிய விடயங்களையே அடுக்கிவிடலாம். இதே போன்று இலங்கை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் நாடுகள் இனப்பிரச்சினை என்பதனையும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாம் முன்வைக்கும் முக்கியமான விடயமாக பயன்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட பட்டியலில் இருக்கத்தக்க விடயங்களில் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் மேற்குலகானது இலங்கை மீது மிகுந்த அதிருப்தியுடனேயே தனது அரசியல் நகர்வினை முன்னெடுத்து வருகின்றது.

கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டது போன்றுஇ இனப்பிரச்சினைத் தீர்வை மிக முக்கிய விடயமாக இலங்கையில் தலையீட்டைக்கொண்டுள்ள நாடுகள் முன்வைக்கையில்இ இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சகல தரப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தரப்புக்களுக்கு இதில் ஓர் முக்கிய வகிபாகம் கிடைக்கின்றது. மேலும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பது தலையீடுகளுக்கு உரிய நாடுகளின் விடயத்தில் நின்று பார்க்கையில் எவ்வாறாகப் பெறுமானம் உடையது என்பது கூட மதிப்பிடத்தக்கது. இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஒரு சர்வதேசதரப்பு நாடுகள் எதாவது ஒருவகையில் தமது நலன்களை நோக்காகக் கொண்டேனும் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றினை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த விளைவதை சர்வதேச அரங்கில் நாம் காணமுடிகின்றது. இப்படியாக சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்கையில், அந்த சர்வதேச தரப்புக்குப் போட்டியாக இலங்கையில் தலையிட விரும்பும் சர்வதேச சமூகத்தின் மறு தரப்பொன்று, நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புக்களை இலகுவாக்கி நெருக்கடிக்குள் தள்ளிய விடயத்தினை தாம் நிவர்த்தி செய்துவிடலாம்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு தரப்பு நாடுகள் கட்டுப்பாட்டை இலங்கை மீது விதிக்க முற்பட்டால், அதிலிருந்து மற்றொரு நாடு(சர்வதேசதரப்பு) தனது இலங்கை மீதான தலையீட்டுப் போட்டிக்காக பொருளாதார உதவிகளை வழங்கி காப்பாற்றி விடமுடியும். ஆனால் இலங்கை விவகாரங்கள் மீது அக்கறை கொண்டுள்ள சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இனப்பிரச்சினை என்ற விடயத்தினை முன்வைக்கின்ற நிலை ஏற்பட்டால் போட்டியடிப்படையில் தலையிடுகின்ற நாடுகள் இவ்விடயத்தை பதில் செயற்பாடு ஒன்றின் மூலம் நிவர்திதிக்கமுடியாத விடயமாகவே அமையும். ஒரு தரப்பினால் இனப்பிரச்சினை தீர்வு விடயம் அங்கீகரிக்கப்படுமாயின் மற்றத்தரப்பினால் அதனைத் தமது உதவிகளை வழங்கித் தகர்க்க முடியாது.

எனவே தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயம் இலங்கையில் விவகாரத்தில் அக்கறை செலுத்தும் நாடுகள், அதனை தமக்குரிய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்ற செயற்பாடானது தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை அடைந்து கொள்ளுவதற்கான மிகச் சிறந்த சந்தற்பமாக உருவாகி வருகின்றது. எனினும் தமிழ் தரப்பு தமக்கென உறுதியான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்காவிடின் இனப்பிரச்சினை என்கின்ற விடயத்தை கையில் எடுக்க விரும்பும் ஒரு சர்வதேசத்தரப்பு தமது தேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச தீர்வை வலியுறுத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க வேண்டிய நிலை இன்னுமொரு சர்வதேச தரப்புக்கு ஏற்படுமாயின் தமிழ் தரப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகும். அதனால் தான் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என நாம் வற்புறுத்துவதற்கான காரணமாகும்.

தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் முக்கியத்துவமுடைய தரப்பினராக இன்று உள்ளனர். இவ்வாறான முக்கியத்துவத்திற்குரிய தமிழ்; மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கிட்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கூட்;டமைப்பின் அமெரிக்க விஜயம் கூட அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு எவ்வகையில் சர்வதேச அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாக உள்ளதோ அதற்குச் சமமான அளவு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத் தரப்புக்களுக்கும் தமிழர் தரப்பு தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது. இவ்வாறான மதிப்பீடுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் ரீதியாக மிகப் பலமான நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி எமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். எமது மக்கள் நம்பிக்கையிழந்து துவண்டுவிட வேண்டியதில்லை.

நன்றி:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 


சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம்,.....

....எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.

சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது.

தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது.

முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.

சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர்.

இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.
இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.

சோல்பரி அரசியலமைப்பு
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இனங்களிடையே பன்மைவாதம் (pluralism) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.

இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.

இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும் நம்பினார்கள்.
இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது.

இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வு, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது என்பதையேயாகும்.

இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற் சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.

முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது.


இவ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள்.

அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும் போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில் உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது.
மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும்.

இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.


இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர்.
இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.


இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும்.

மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.

இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது.

இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.

இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.
இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம் கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.

அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை அரசு நடத்தியது.

இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது.

இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.

இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும்.

இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது.

நன்றி : உயர்வு.காம் , தமிழ்வின் மற்றும் உயர்திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.  

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)