Thursday, August 25, 2011

அதிமுக ஆட்சியின் முதல் நூறு நாட்கள்!

இந்நாட்டின் மன்னர்களாகிய மக்களும் ,
சனநாயகத் தூண்களாகிய தின, வார, மாதப் பத்திரிக்கைகளும் ,
ஊழல், அராஜக , குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாளர்களும்,
அரசியலில் சினிமாவா? அரசியல்வாதிகள் சினிமா எடுப்பதா என்று அன்றாடம் அராஜகத்திற்கெதிராக பொங்கியெழுந்த புது இளைஞர்களும்
வேண்டி விரும்பி , தாழ்மையுடன் கொண்டுவந்த அதிமுக ஆட்சிக்கு ஆயுசு நூறு நாள் ஆகிறது.!!

இதுவரை ஊழலே செய்திருக்காத ' அம்மா ' அவர்களே நீங்கள் தான் இந்த தமிழ்த்திருநாட்டை தங்கவளம் கொழிக்கச் செய்ய வேண்டும் என்று 'ஊரான் காசில் வாங்கிக்கட்டிய கொடநாட்டு' மாளிகையில் உடன்பிறவா சகோதரி சகிதம்  உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி வந்து முதலமைச்சராக்கி ஆயிற்று ஒரு நூறுநாள்.

இதுகாறும் பொதுச் சொத்துக்களையே அபகரித்திருக்காத புரட்சித்தலைவி 'டான்சி' புகழ் ஜெயலலிதா அவர்களின் சிறுதாவூர் பங்களா முன் 'நில அபகரிப்புப் போராட்டம் நடத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி மகிழ்ந்த கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வெற்றியடைந்து ஆகிறது நூறு நாள்.!!

குடும்ப ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் , மனைவி மச்சினன் சகிதம் வாளெடுத்துப் போராடிய சினிமாச் சிங்கம் விஜய்காந்த் எதிர்க்கட்சி ஆகி ஆகிறது நூறு நாள்.!!

அளவிட முடியாத சாதனைகளை , அள்ளிட முடியாத நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த நூறுநாட்களை மறந்திட முடியுமோ? மக்களின் மனதில் பசுமரத்தாணியாய பதிந்து கிடக்கும் அம்மாவின் அரிய சாதனைகளைச் சொல்லிட இந்த வலைப்பூதான் போதுமோ?

தலைமைச்செயலகத்தைத் தரிசாக்க பல நூறு கோடி  பணம் வீண்.....அம்மா ஆட்சியைத்தவிர வேறெந்த மடையன் ஆட்சியில் இது போன்று மக்கள் பணம் வீணடிக்கப்படும்?இஃதொன்று போதாதா அம்மாவின் ஆட்சிசிறப்பிற்கு?

சமச்சீர் கல்வி புத்தகம் சரியில்லையென்று  2மாதம் பள்ளிக்குழந்தைகளின் படிப்பை வீண்டித்த அம்மாவைப்போன்ற அற்புத சக்தியைத் தவிர வெறெவரால் முடியும்?



ஆண்டாண்டுகாலமாய் இருந்த மின்வெட்டை ஆட்சிக்கு வந்தவுடன் ச்சூ மந்திரக்காளி போட்டு தீர்த்துவைத்த பெருமையைத் தான் என் சொல்வது?

அகில பாரதமும் பாராட்டும் வண்ணம் , சிவில் வழக்குகளுக்காக அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் கைது செய்யும் அரசியல் சாசனத்திற்கெதிரான செயல்கள் அம்மாவின் ஆட்சி தவிர வேறெங்கும் நடப்பதற்கான வாய்ப்புதான் ஏது?

அடிப்படைச் சட்ட ஞானம் இல்லாமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தவறுதான் என்று அரசு வழக்கறிஞ்ரே ஒத்துக்கொள்ளும் அளவிற்கு பெருமைமிகு அமைச்சர்களைக் கொண்ட துக்ளக் அரசின் சாதனைகளைத்தான் என்னென்பது?

அதிகாரிகளை சேலத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்குச் ரயிலேறி போய்ச் சேருவதற்குமுன் மதுரைக்கு மாற்றியடிக்கும் கோமாளிக்கூத்துக்களின் பெருமைகளைத்தான் என்னவென்று சொல்லிச் சொல்லிப் புகழ்வது?

ஈழத்தாய் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றி அகில உலகையும் திரும்பிப்பார்க்க வைத்து புரட்சித்திலமான பெருமையைப் பற்றி ஸ்பெஷல் பதிவே போடலாம்!!

நில அபகரிப்பு அவசரச் சட்டத்தை அதிமுக சொம்புகளுக்கு மட்டும் செல்லாததாக்கிச் செய்த புரட்சி பற்றி பேசினால் இன்னொரு நூறு ஆள் ஆகிவிடும்!!!

ஆக, வளமும்  , செல்வமும் கொழிக்கும் இந்த மாதம் மும்மாரி பெய்யும் அதிமுக அம்மா ஆட்சிக்கு நூள் ஆகிறது......

ஆட்சிக்கு மட்டுமா நூறு நாள்....அம்மாவின் சொத்துக்குவிப்பு  வழக்கிலும் தான் நூறு வாய்தாவுக்கு மேல் ஆகிறது...

மென்மேலும் ஓங்குக அம்மாவின் புகழ்....
வளர்க அம்மாவின் செல்வம் ( சிறுதாவூர் , கொடநாட்டு , ஹைதராபாத் திரடசை தோட்டத்தையும் தாண்டி....)

வாழ்க மக்கள்...வளர்க மக்களாட்சி.........