Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, May 03, 2010

மே 18 - அழிஞ்சுதான் போயினம்…ஆனா.........


தொப்பியும் , சீருடையும் , கவசமும் தரித்த அரசுப்படைகளுடன்,
பிய்ந்த ரப்பர் செருப்பினையும் , லுங்கிகளையும் தரித்துப் போரிட்ட
எமது புலிமறவக் கூட்டங்கள் சலிக்காமல் ரவையடித்தக் கதையதுகாண்.
எல்லாமும் கைமீறிப் போயிற்று…ஆம் , எல்லாமும் தான்.
எதிர்கால நம்பிக்கையாகவிருந்த  “கருணா”க்கள் குறிசொல்ல
அச்சமும் , பழியும் , பகையும் கொண்ட சிங்களன் சினம்கொண்டு வந்தனன்.
அதிர்வேட்டுக் கிளப்பி , அன்றாடம் அனல்காற்றென சுட்டெரித்த எம்
புலிக்கூட்டம் அந்தோ பரிதாபம் , விஷக்காற்றினால் வீழ்ந்தது காண்…!
வீரம் எம்மோடு விளைந்த தொன்றே….ஆனால் துரோகம் எமக்கு தூரமன்றோ?
சூழ்ச்சிக் களத்தில் சுருண்டு போயினர் எம் புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தில்!.
நந்திக்கடலொரு புறமாய் , இந்து மகா சமுத்திரமொரு புறமாய்
நச்சுத்திட்டமிதையிட்டு எம் தலைமையிதை முற்றுகை செய்த சதியெது?
ஆரேனும் வந்து எம் சனத்தை , புலியை , போராளியை மீட்டுச்செல்வரென
ஆகாத நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது யார்? எச்சக்தியது?
கரந்தடிப்புலியாகி , இந்திய வல்லரசை இமை மூடாவண்ணம்
காத தூரம் ஓட்டிய பிரபாகரனின் பிள்ளைகள் காசுக்கு குரைக்கும்
சிங்களத்து சிறுபிள்ளைகளிடம் வீழ்ந்த கதை எப்படி நம்ப?
சீனத்து வெடிமருந்தோ , சீமையின் தந்திரமோ , ஆரியத்தின் சூழ்ச்சிதானோ…
சினம் மிகுந்து கேட்டுக்கொண்டேன்…சிக்கவில்லை விடையின்னும்….
ஆறாத காயமுண்டு……ஆற்றாமை நெஞ்சிலுண்டு….
ஆரியக் கூட்டத்தின் மேல் அடங்காத கோபமுண்டு…….
அப்போது சொல்லிப்போட்டான் அருகிலுள்ள என் நண்பன்.
ஊரை வெய்தென்ன உபயோகம்…. ஊட்டுக்குள்ளே இருந்தது துரோகம்.
ஊமை போல் அது நின்னு அழித்துப்போட்டது தமிழ்ப்பிள்ளைகளை.!
ஆறாத காயத்துக்கு மருந்தின்னும் போடவில்லை.
அதுக்குள்ளே வந்து நிற்குது அடுத்த மே மாசம்….
ஆம் , கடந்து போன மே – 18 , அழிந்துதான் போயினம்…
அக்குவேறு ஆணிவேறா பிரிந்துதான் போயினம்……..
வீரப்பிள்ளைகளை பரிகொடுத்துத் தவிக்கினம். ஆனாலும்
வீரமொன்னும் போகவில்லே…….வீரியமும் குறையவில்லே.
தமிழீழ மண்ணைத்தான் கொஞ்சம் பையிலே முடிஞ்சிகிட்டு
தக்க சமயத்துக்கு காத்திருக்கோம் கண்ணுறங்கும் வீரர்களே….
தமிழால ஒண்ணு சேர்ந்தோம்..தமிழுக்கே செத்துப்போனோம்…..ஆமாம்
தக்க சமய்த்துக்கும் காத்திருக்கோம் கண்மணிகளாள்…….
கொஞ்சம் பொறுத்துக்குங்கோ….கூடவந்து சேந்துடுவோம்….
சுதந்திரக் காற்றக்கொஞ்சம் கொண்டு வந்து சேத்துடுவோம்….!
அதுக்கான சபதமொன்னை இப்போதான் எடுத்திடுவோம்….!
ஆம். மே – 18 அழிஞ்சுதான் போயினோம்…ஆனால்
உயிர்த்தெழுவோம்…அடங்காத காளைகளாய்………!

Monday, September 28, 2009

ஸ்ரீ அனுமன் சாலிஸா - தமிழில்.!

ஸ்ரீ துளசிதாசர் இயற்றிய ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ் , ஆஞ்சநேய வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று நடந்த சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரம் அனுமன் வழிபாடு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள்.....ஆகவே உங்களின் பார்வைக்கு.......இதன் மூல வடிவத்தை தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினை அழுத்தவும்.


ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ்





குருவின் தாமரைப்பாதம் பணிவேன்..
உருவிலா மனதின் மாசு நீக்குவேன்.

ராமனின் அருளின் திறனை வியப்பேன்.
வீடுபேறினை அடைந்திடல் செய்வேன்.!

எத்துணை சின்னஞ்சிறியவன் நானே…
அத்துணை சான்றோர் ஆன்றோர் நடுவே.

அத்துணை திறனையும் எனக்களித்தருள்வாய்.
அகிலத்தின் துன்பம் அனைத்தும் நீக்குவாய்..

மூவுலகையும் நீ வென்றது சரித்திரம்……
உனை வணங்கிட நெருங்குமோ தரித்திரம்?

வாயு புதல்வனே…அஞ்சனை மைந்தனே..
உனை வென்றிட உலகினில் யாருளர்.

ரகுவரன் தூதனே , இராம பக்தனே
வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றாய்..!

தைரிய புருஷனே , அறிவின் அடக்கமே…
உன்னை நம்பியே பணிந்திங்கு வேண்டினோம்!

தீயவை எரிந்திட தீயிட்டுக்கொளுத்திடு..
நல்லவை செய்திட நாளும் துணைசெய்..

அல்லாதவைகளை அகற்றிட உதவு..
எல்லா மனிதரும் உயர்ந்திட உதவு.!

தங்கம் வார்த்த தகதக தோளினன்.
அங்கம் போர்த்திய அழகுநல் உடையினன்.

காதினில் தொங்கிடும் அழகுக்குண்டலம்.
காரிருள் ஒத்த உன் மேகக் கேசம்.

உன் வெற்றீயைச் சொல்வது கதாயுதம்தானே.
உன் வெற்றியால் பறப்பது கொடியது தானே.

உன் மார்பினில் நெளியும் முப்புரி நூலோ….
உன் புகழினைப் பாடி பூரிப்படையும்….

அழகுச்சிவனாரின் அம்சம் நீயே…
அறிவுக்கேசரியின் பெருமை  நீயே….

அண்டமெங்கிலும் உன் ஆட்சியைச்செலுத்தினாய்.
அதனால் உலகைச் சாந்தப்படுத்தினாய்…!

அறிவுக்கடலே , கல்வியின் பிறப்பே…
அடங்காப் புகழுடன் நீ இங்கு வாழ்ந்தாய்.

இராமன் உனைத் தன் சேவகன் ஆக்கினார்.
அவர் இட்ட கட்டளையை இசைவுடன் செய்தாய்.!

ராம , லஷ்மணர் சீதையைப் பணிந்தாய்.
அவர்களை உந்தன் நெஞ்சினில் கொண்டாய்.

ராமர் தம் புகழை பாடுதல்  கடனே…..
உன்னைப் பாடுதல் என் தவப் பயனே….

அளவற்ற சக்தியால் சிற்றுருவம் கொண்டாய்.
ஆக்ரோஷ சக்தியால் இலங்கை எரித்தாய்.

அடக்கம் மேலிட சீதையைக் கண்டாய்…
அன்புடன் இராமனின் சேதியை உரைத்தாய்…


உன் ஒப்பிலா வீரத்தால் அசுரரை அழித்தாய்
இராமனின் கட்டளை நிறைவேற்றி முடித்தாய்..

சஞ்சீவி பெயர்த்து சரித்திரம் ஆனாய்.
இலஷ்மணின் உயிரை மீட்கவே செய்தாய்.

இராமனின் தம்பியை மீட்டுக் கொடுத்ததால்
பரதனை யொத்தவன் நீயெனச் சொல்லி மகிழ்ந்தார்…

அனுமனைத் தொழுதல் இராமனைத் தொழுதலே..
அனுமனின் ஆசிதான் இராமனின் அருளே…!

சிவனும் , பிரம்மனும் , நாரதமுனியும்..
உன் புகழ் அளக்கவே அனுதினம் முயன்றார்..

யமன் , குபேரன் சரஸ்வதி தேவியும்
உன்புகழ் காணாது இயலாது நின்றார்…..

சுக்ரீவன் , இராமன் இருவரை இணைத்தாய்…
சுகப்பட்ட இராஜ்யம் உன் அரசனுக்களித்தாய்..

வீர விபிஷணன் உன் சொல் கேட்டான்…
அதனால் அவனோ இலங்கையை மீட்டான்.

இராமனின் மோதிரம் சுமந்தவன் நீயே…
சூரியன் சாட்சியாய் கடல் கடந்தவன் நீயே…

அரிய வித்தைகளின் இருப்பிடம் நீயே…
அதனால் வியந்தவர் பலகோடிப் பேரே…


உன் அருள் இருப்பின் துயரம் போகும்.
என் கடின இலக்கது பனியாய் விலகும்.

இராம இராஜ்யத்தைக் காத்தவன் நீயே…
எனையும் காப்பாய் காற்றின் சேயே..

என்னைக் காப்பதால் கவலை தீரும்…
எனக்கருள்வதால் மகிழ்ச்சியும் சேரும்…

உனை நான் வணங்கிட அச்சம் அகலும்..
உனை நான் தொழுதிட இன்பம் பெருகும்..


மூவுலகுமே உன் ஒரு சொல் கேட்கும்…..
நவ கோள்களும் உன் அசைவுக்குப் பணியும்…

பூதம் , பிசாசு , பலவகை முனிகளூம்
உன் நாமம் சொல்லிட தூரவே விலகும்…

வலிகள் , நோய்கள் , பலவகை பிணிகள்
வாயு புதல்வனின் பேருக்கு அஞ்சும்…!

வாயு புத்திரா , அஞ்சனை மைந்தா……
உன் பெயரது சொல்லிட பிணியது தீரும்…

மனதில் , கருத்தில்  அனுமனை வைத்தோர்…
மகிழ்வுடன் அவனது பாதம் பணிந்தோர்….
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பார்…
வாழ்வின் துயரங்கள் வாராது களிப்பார்..!

இராஜன் இராமனின் பாதம் வணங்கிட…
உண்மை உணர்வுடன் தொழுது பணிந்திட…
உலகக்காரியங்கள் வெல்வது சத்தியம்…
ஊமைத் துயரங்கள் கடப்பது நிச்சயம்….

நால்வகை காலமுன் பெயரது சொல்லும்…
அண்டமனைத்தும் உன் புகழது உரைக்கும்…

இராமனின் விருப்ப தேவதை ஆனாய்….
இராஜ்யம் , முனிகள்  , மக்களைக் காத்தாய்…

சீதாப்பிராட்டியின் மகனென ஆனாய்….
அட்டமா சித்திகளை அதனால் பெற்றாய்…

நவ நிதிகளை ஒருங்கே பெற்றாய்…
நல்லவர் வாழ தீயவை ஒழித்தாய்…..

இராமனை வணங்கி பக்தனாய் ஆனாய்….
இராமநாதத்தை பணிவுடன் சொல்வாய்…

இனிவரும் பிறப்பிலும் இசைவுடன் செய்வாய்…
உன்னை தொழுதால் இராமன் மகிழ்வார்…

மரணச் சமயத்தில் இராமனை வணங்குவோர்…
வரும்பல பிறப்பிலும் பக்தனாய் பிறப்பார்..

முக்தியின் திறவுகோல் ஆஞ்சநேயன் அவனே…
அவனை வணங்குதல் மோக்சத்தின் கடனே…

அனுமனின் பக்தனாய் ஆனவன் எவனோ
அடுத்த  பிறப்பிலும் துயரது விலக்குவான்…

வெல்க வெல்க அனுமனே வெல்க…
வெல்க வெல்க ஆஞ்சநேயனே வெல்க…

உணர்ச்சியின் கடவுளே உண்மை வெல்க..
உன்னை வணங்கினேன் உன் அருளது வெல்ல..

உன்னை வணங்கிட அணுகுமோ திது?
என் குரு நீயே இனி கவலை ஏது….?

அனுதினம் அனுமனை வணங்கிக் களித்தோர்..
அனுமன் சாலிஸா இதை பக்தியாய் படித்தோர்….
அனுமனின் ஆசியை அன்புடன் பெறுவார்….
சிவனார் அருள்வார்…..சித்திகள் புரிவார்…!

காற்றின் கடவுளே , அஞ்சனை சேயே…
தெய்வீகப் பிறப்பாய் தீயவை அழித்தாய்….

துளசிதாசர் போல் உன் சேவகன் ஆனேன்.
துன்பம் விலக உன் அடியேன் ஆனேன்….

இறைக்கு இறையே , இன்முகக் கடவுளே..
இராமனும் , நீயும் எம் நெஞ்சில் உறைவீர்.

போற்றி போற்றி ஆஞ்சநேயா போற்றி.
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி வாயுபுத்ரா போற்றி..
போற்றி போற்றி அறிவே போற்றி.
போற்றி போற்றி அருளே போற்றி.



இந்த மொழிபெயர்ப்பை முடிந்தளவு சரியாகவே செய்திருப்பதாக நம்புகிறேன். எங்கேனும் தவறு இருப்பின்  தாயுள்ளத்தோடு சுட்டிக்காட்டவும். 



மொழி பெயர்த்தவர் - பாலசுப்பிரமணியன்

இதற்கான உழைப்பும் , செலவிட்ட நேரத்தையும் நீங்கள் மதீப்பீர்களானால் , இதை பிரதியெடுத்து வேறு தளத்தில் பதியும் போது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் , யாரால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறோம்.

'ழ'கரம்