Showing posts with label தலையங்கம். Show all posts
Showing posts with label தலையங்கம். Show all posts

Saturday, September 19, 2009

ழகரம் - தலையங்கம்(19.09.09) - உலகத் தமிழ் மாநாடு

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் அடுத்த ஆண்டு நடத்துவதாக பெருமதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

முதன்முதலில் மொழியால் இணைந்தவர்கள் அம்மொழிக்காக விழா எடுத்த பெருமை தமிழ் மொழியையே சாரும்.அத்தகைய மொழிக்காக ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த முயல்பவர்களை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டவே முயல்வார்கள்.

அத்தகைய நன்முயற்சியில் அரசியலைக் கலப்பதில் யாருக்கும் விருப்பமிருக்கவியலாது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தாய்த்தமிழகத்திலும் , அதற்கடுத்தாற்போல் மலேசியாவிலும் , ஈழத்திலும் மற்றெல்லா நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இன்றைய அளவில் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை , ஈழ வதை முகாம்களில் வாடுகின்ற ஒரு சூழலே….

உலகம் முழுமையும் ( தத்தமது சுயநல நோக்களுக்காக என்றாலும் ) அப்பிரச்சினையை தீவிரமாக அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழலில் , உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கும் கலைஞர் அவர்களின் செயல்பாடு என்ன என்பதை நடுநிலைத் தமிழர்கள் நன்றாகவே உணர்கிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் கலைஞரின் செயல்பாடு பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்படியொரு நிலையில் இன்றைக்கு உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய நடுவண் அரசினை வலியுறுத்தி முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்கவும் , அதன் பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினையும் பெற்றுத் தர கலைஞர் முயற்சிப்பாரானால் உலகத் தமிழ் மாநாட்டை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றி மாநாடாக்கி அந்த வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்பார்கள்.


அப்போதுதான் மாநாட்டின் நோக்கம் முழுமையாக வெற்றி பெரும். அதைவிடுத்து இந்த மாநாட்டையும் ஒரு அரசியல் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமோ என்ற இயல்பான சந்தேகம் தமிழர்களிடையே மிகுந்து கிடக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கலைஞரின் கடமை…

காரணம் உலகத்தமிழ் மாநாடு திமுகவின் மாநாடு அல்ல.
தமிழர்களின் மாநாடு…

அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை…! அக்கடமையை சரிவர தமிழர்கள் செய்ய கலைஞர் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீளப்பெறுதல் மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கு அடிப்படையானது.