Tuesday, October 27, 2009

வணக்கம் திருமா…..இன்னொரு முண்டம் பேசுகிறேன்…!

தனிப்பட்ட முறையில் நமக்கு திருமாவளவன் அவர்கள் மேல் நமக்கு எந்தக் கோபமும் இல்லை. வாழ்ந்து முடித்த தலைவர் கூட பதவியைப் பிடித்துக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கிற சூழலில் , மகன் மந்திரி ஆன பிறகும் கூட , நாடாளுமன்றத்தில் , சட்டமனறத்தில் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகள் ஆன பிறகும் கூட எங்கே தாவலாம் என்று காத்திருக்கும் தமிழின உணர்வாளர்கள் மிகுந்திருக்கும் இத்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிற ஒருவர் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுகிறேன் என்று சொல்லுகின்ற ஒருவர் இந்த அளவேனும் தனது குரலை உயர்த்திச் சொல்லுகிறாரே என்று சந்தோஷம் தான் பட்டோம்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருமா எடுத்த நிலையில் கூட எந்தவித வருத்தமும் இல்லை…..நிறைய முறை நாம் வைகோவின் மீதும் , நெடுமாறன் மீதும் , சீமான் மீதும் புலிகளின் தமிழ்த்தேசிய போராட்டத்தை , தமிழீழத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை தமிழினத்தின் நலனை எக்காலமும் விரும்பியிருக்காத ஜெயலலிதாவிடம் ஒரு தேர்தல் பிரச்சினையாக அடகு வைத்து விட்டார்களே என்ற ஆற்றொணாக் கோபம் கொண்டிருந்தோம். அதற்கு சற்றே மேம்பட்ட நிலையைத் தான் திருமாவளவன் எடுத்தார் என்றே எண்ணினோம்.!


ஆனால் காலம் பாருங்கள் ....இன்று அவரது நிலைமையை விமர்சித்து ஒரு பகீரங்கக் கடிதத்தை எழுதும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.


வணக்கம் திருமா அவர்களே.....


உப்புக்கொஞ்சம் அதிகம் போட்டுச் சாப்பிடுகிற காரணத்தால் நாங்கள் நலமாயில்லை......! நீங்கள் நலமாய் இருக்கிறீர்களா?


ஒருவாரமாக மனது கடும் உளைச்சலில் இருக்கிறது. எண்ணியவற்றை எழுத்தாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று கை பரபரத்தது.  இனி இதோ எம் எண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....( பகீரங்கக் கடிதம் , வேண்டுகோள் , விமர்சனம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளூம் உரிமையை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.)


முள்வேலிக்குள் மூணு லட்சம் சனம் தவிக்கிற ஒரு சூழலில் , நீங்கள் இலங்கைக்கு தூதுக்குழுவில் இடம்பெற்று சென்ற போது எல்லோருக்குமே ஒரு இயல்பான எதிர்ப்பார்ப்பு எழுந்தது.எல்லோருக்குமே ஒரு மெலிதான நம்பிக்கை பிறந்தது.

எல்லோருக்குமே உங்கள் மூலம் நமது மக்களின் அவல நிலை வெளிப்பட்டு விடாதா என்ற ஏக்கம் இருந்தது.

தோழர் திருமா ….


நீங்கள் ஒத்துக்கொண்டாலும் , ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த எதிர்ப்பார்ப்பை வீணடித்து விட்டீர்கள் என்பதுதான் உண்மை…


தோழர் தி்ருமா….

நீங்கள் என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் எங்களின் அந்த நம்பிக்கையை சிதைத்து விட்டீர்கள் என்பதே உண்மை.


தோழர் திருமா……


நீங்கள் இப்போது என்னதான் வீரம் பேசினாலும் எங்கள் ஏக்கத்தை , தவிப்பை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்பதே உண்மை…


அதை விடுத்து உங்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் திருமாவை விமர்சிப்பவர்கள் எல்லோரும் தலையற்ற முண்டங்கள் என்று பதிவிடுகிறீர்கள்….! விமர்சிப்பவர்களை நீங்கள் இப்படி விமர்சிப்பதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்வதன் அர்த்தம் என்ன? அத்தகைய விமர்சிக்கும் ஒரு முண்டமாகவே என்னையும் கருதிக்கொள்ளூங்கள்...! எங்களுக்கு பெரியார் விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறார்..!


பகுதி – 2 ஐ பார்க்கச் சொல்லி வேறு மேற்கோள் காட்டியிருந்தார்கள்…….அதில் என்ன சொல்கிறீர்கள்????


தினமலரில் விமர்சித்த முண்டத்திற்கு இதுதான் பதில் என்று சொல்லியிருக்கிறீர்கள்.!


அங்கே போய் ராஜபக்சே கொடுத்த பஜ்ஜி , சொஜ்ஜியை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருமே சாப்பிடக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார்கள் என்கிறீர்கள்…அதன் மூலம் உங்களைப் பற்றி மட்டும் நியாயப்படுத்தவில்லை…..யாரையெல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள் தெரியுமா?


தோழர் திருமா …..கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்….அது யார் எழுதியது தெரியுமா?


சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைக் காட்டிலும் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்ட தமிழர்களின் எண்ணிக் கை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் சித்ரவதை முகாம், ஹிட்லரின் சித்ரவதை இருட்டறைகளை விட கொடுமையானது என்பது உலகின் கணிப்பு. இந்த சித்ரவதை முகாம்களில், சிங்களவர்கள் துன்புறுத்தப்படுவதில் லை. மாறாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களே துன்புறுத்தப்படுகின்றனர்.

        அது யாருடைய குரல் தெரியுமா?

இதோ இணைப்பினைக் கொடுக்கிறேன்…..படியுங்கள்….


உங்களோடு பத்து எம்.பிக்களில் ஒருவராக வந்த அழகிரி என்கிற காங்கிரஸ் எம்பியின் குரல் அல்லவா அது? காலமெல்லாம் புலிகளைக் கரித்துக்கொட்டுவதில் குறியாய் இருந்த இந்த அழகிரியா ராஜபக்சேவின் பஜ்ஜி சொஜ்ஜியை வேண்டாம் என்று சொன்னார் என்று கதையளக்கிறீர்கள்???


தமிழ்த்தேசியத்தையே சிதைக்கின்ற அளவிற்கு தன் கருத்துக்களால் விஷம் விதைத்த இவர்களைப் போன்றவர்கள் ,எல்லாம் அருமையாகவே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த ஆருண் , சுதர்சன நாச்சியப்பன் போன்ற தமிழ்த் தேசிய விரோதிகள் எல்லோரும் ராஜபக்சேவிடம் விருந்துணவு சாப்பிட மறுத்தார்கள் என்ற தவறான கருத்தை நீங்கள் பதிவு செய்வதன் மூலம் உங்களை அவர்களோடு இணைத்துக்கொள்ள ஏன் துடிக்கிறீர்கள் திருமா?


உங்கள் நியாயப்படுத்தலுக்கு ஒரு அளவு   வேண்டாமா? கலைஞர்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த சுயமரியாதையை விற்றுக் காசாக்கி எங்களைக் கண்ணீரில் தள்ளி விட்டார் என்றால் நீங்களுமா?


கலைஞரின் பாரிய முயற்சியால் எல்லாம் நன்றாக நடந்துவிட்டதாக  சொல்கிறீர்கள். அதை குறை சொல்வது எமது நோக்கமுமல்ல. யார் குத்தியாகிலும் அரிசியானால் போதும் என்ற அவல நிலையில் தான் தமிழினமும் இருக்கிறது. அது இனத்துரோகிகளால் வந்த இழிநிலை. அத்தகைய துரோகிகளில் ஒருவரால் தான் ஈழத்தமிழினம் பிழைக்கிறது என்று நீங்கள் சொல்வதை ரசிக்க முடியாவிட்டாலும் கடந்து போகிறோம்..



ஐரோப்பிய ஒன்றியமும் , அமெரிக்காவும் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இலங்கை இந்தியாவிடம் கையேந்த , அதன் மூலம் மத்திய அரசு போட்ட சூழ்ச்சிதான் இந்த ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஜயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதன் மூலம் தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தது இலங்கை அரசு என்பதும் நீங்கள் திரும்பி வந்த அடுத்த நாளே இலங்கைஅரசு கொடுத்த பேட்டிகளைப் பார்த்தாலே புரியும்.


அச்சூழலில் , உங்களின் சிறு எதிர்ப்போ , அல்லது முகாம்களின் , தமிழர்களின் அவல நிலை பற்றிய எந்தவொரு கருத்து அங்கிருந்து , இலங்கையிலிருந்து நீங்கள் பதிந்திருந்தாலும் அது உலக நாடுகளின் பாரிய கவனத்தைப் பெற்றிருக்கும் , இந்திய மீடியாக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் , உண்மைநிலை என்னவென்று உலகுக்கு விளங்கியிருக்கும் என்ற எளிய உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதவராகவே இருக்க விரும்புகிறீர்களா திருமா?



வாய்ப்புக்கிடைத்த போது பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்துவிட்டு இங்கே வந்து தெருமுனையில் மைக் போட்டு உங்கள் தரப்பு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வதால் எள் முனையளவிற்காவது எம் இனத்திற்கு நன்மை உண்டா திருமா? அட வெகுஜன இதழ்களில் கூட அது அச்சேறாது என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்ததுதானே?


கடைசியில் தமிழினம் அது இதுவென்று வீராவேசம் பேசி நான்கைந்து பேரை தீயிற்கு இரையாக்கியதைத் தவிர வேறென்ன சாதித்தீர்கள் திருமா? உங்களை நியாயப்படுத்திக்கொள்வது விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர் படையைத் தக்க வைத்துக்கொள்ள மட்டும் தானே உதவுகிறது? அதனால் தமிழ்த்தேசியப் போராட்டம் என்ன வலுப்பெற்றது என்று விளக்கமுடியுமா திருமா?


அட , பதினைந்தே பேராக இருந்தாலும் இலங்கைத் தூதகரத்தைத் தாக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனமனைத்தையும் பெற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட தனித்துத் தெரிகிறார்…..ஆனால் இன்று உங்களின் தமிழுணர்வைக்கூட சந்தேகப்படும்படியாக இன்று நாலுபேர் கேள்வி கேட்கும்போது அதற்கெல்லாம் பதில் சொல்லுமளவிற்கு நீங்கள் தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? எது காரணம்?


சில விடயங்களீல் பதிலைப் பேசுவதைவிட அமைதியாக தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே சிறந்த மருந்தாகும். தவறுகளைத் திருத்திக்கொள்வதே சிறந்த மனிதப் பண்பாகும். நாம் மனிதர்கள்..தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்லர்.


அதனால் உங்கள் நியாயப்படுத்தல்களையும் , பசப்பு வாதங்களையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள். தமிழின விடுதலைக்கு எதிரானவர்கள் உங்களை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளூங்கள்…..


உங்களைப் போன்ற போர்க்குணம் மிக்க தலைமைகள் தமிழினத்திற்குத் தேவை…. ஆயுதம் ஏந்தா விடுதலைச் சிறுத்தைகளாய் சமரசமற்ற விடுதலைப்பாதையில் நீங்கள் பயணியுங்கள்….! வெற்றீகளை வீர மறவர்கள் வீடு கொண்டு சேர்ப்பார்கள்..


கவலை விடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டு வாருங்கள்…… தமிழகத்தைத் திரட்டி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதில் சொல்லச் சொல்லி உலகத்தின் மனச்சாட்சியை உலுக்குங்கள்..!!!


இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாளில் உலகம் பதில் சொல்லும்..! சொல்லித்தான் ஆகவேண்டும்….
 
அதுகாறும் உணர்வுள்ள எந்தவொரு தமிழனும் அடங்கமாட்டான்….
 
யார் அடக்கினாலும் , அது நேற்றைய தமிழினத் தலைவராகவே இருந்தாலும் அடங்க மறுப்பான்….அத்து மீறுவான்.!



கதிரவன்

ஒரு தமிழ்த்தேசியன்

5 comments:

ரோஸ்விக் said...

//அச்சூழலில் , உங்களின் சிறு எதிர்ப்போ , அல்லது முகாம்களின் , தமிழர்களின் அவல நிலை பற்றிய எந்தவொரு கருத்து அங்கிருந்து , இலங்கையிலிருந்து நீங்கள் பதிந்திருந்தாலும் அது உலக நாடுகளின் பாரிய கவனத்தைப் பெற்றிருக்கும் , இந்திய மீடியாக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் , உண்மைநிலை என்னவென்று உலகுக்கு விளங்கியிருக்கும்//

இது முற்றிலும் உண்மை. இது தமிழ் உணர்வாளரான இவருக்கு ஏன் புரியவில்லை என்பது எமக்குப் புரியவில்லை.

கொங்கு நாடன் said...

*****இது முற்றிலும் உண்மை. இது தமிழ் உணர்வாளரான இவருக்கு ஏன் புரியவில்லை என்பது எமக்குப் புரியவில்லை.*****


தூங்கறவனை எழுப்பலாம் , தூங்கற மாதிரி நடிக்கறவனை?

கொங்கு நாடன் said...

*****
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருமா எடுத்த நிலையில் கூட எந்தவித வருத்தமும் இல்லை…..நிறைய முறை நாம் வைகோவின் மீதும் , நெடுமாறன் மீதும் , சீமான் மீதும் புலிகளின் தமிழ்த்தேசிய போராட்டத்தை , தமிழீழத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை தமிழினத்தின் நலனை எக்காலமும் விரும்பியிருக்காத ஜெயலலிதாவிடம் ஒரு தேர்தல் பிரச்சினையாக அடகு வைத்து விட்டார்களே என்ற ஆற்றொணாக் கோபம் கொண்டிருந்தோம். அதற்கு சற்றே மேம்பட்ட நிலையைத் தான் திருமாவளவன் எடுத்தார் என்றே எண்ணினோம்.! ****



:(????????????????



இது என்ன புதுக்கத சாமி?

கொங்கு நாடன் said...

****
உங்களோடு பத்து எம்.பிக்களில் ஒருவராக வந்த அழகிரி என்கிற காங்கிரஸ் எம்பியின் குரல் அல்லவா அது? காலமெல்லாம் புலிகளைக் கரித்துக்கொட்டுவதில் குறியாய் இருந்த இந்த அழகிரியா ராஜபக்சேவின் பஜ்ஜி சொஜ்ஜியை வேண்டாம் என்று சொன்னார் என்று கதையளக்கிறீர்கள்???***


அதானே?

கொங்கு நாடன் said...

***
வணக்கம் திருமா…..இன்னொரு முண்டம் பேசுகிறேன்…!
***

தலைப்பு ஃகிர்.....ருங்குது.சபாஷ்

எப்படியோ உங்களுக்குள்ளயே அடிச்சிகிட்டு தமிழ்த்தேசியத்த வாழ வுடுவீங்க. நம்புறோம்.