Thursday, October 15, 2009

யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரனும் , தமிழகத்தில் சகுனியும்!

மஹாபாரதத்தில் சகுனி என்ற ஒரு பாத்திரம் இருப்பதை மிகப்பலரும் அறிவார்கள். மஹாபாரதத்தின் அடிப்படையே சகுனியின் சூழ்ச்சிதான் என்பதையும் பலரும் ஒத்துக்கொள்வார்கள். அத்தினாபுரத்தினை வீழ்த்துவதே அச்சகுனியின் உள்நோக்கமாக இருந்தது. நெஞ்சில் வஞ்சகத்தை வைத்துக்கொண்டே ஒவ்வொரு சதியாலோசனையாக துரியோதனனுக்குச் சொல்வான் சகுனி.

தெரிந்தோ , தெரியாமலோ சுயமரியாதை இயக்கமே மஹாபாரதம் பற்றிய எனது கருத்துருவாக்கத்தை வடிவமைக்க உதவியது. கற்பனைக்கெட்டாத பொய்களும் , புரட்டுக்களும் நிரம்பியிருந்த அப்புராணத்தின் ஒரு கேரக்டர் இன்று நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு அசிங்கத்தை , ஒரு அவலத்தை , சுட்டிக்காட்ட உதவுகின்ற நிலை பற்றிய வருத்தம் எனக்குண்டுதான்.

சகுனியாவது வேற்றுநாட்டுக்காரன் ,  வேற்றினத்தான் , வஞ்சகம் கொண்டான். ஆனால் , எங்களுக்கு வாய்த்த சகுனியோ எங்களுக்குள்ளேயே பிறந்தவர். எங்களிடையேயே வளர்ந்தவர்.எங்கள் – எங்கள் என்று நான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கின்ற எங்களை இணைக்கின்ற சக்தியான தமிழைச் சொல்லியே பிழைத்தவர். எங்களுக்கெல்லாம் சுயமரியாதையையும் , பகுத்தறிவையும் போற்றிப்போற்றி வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர்.

ஒவ்வொரு முறையும் அச்சகுனியானவர் அதைச் செய்யப்போகிறேன் , இதைச் செய்யப்போகிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு வழக்கம்போலவே எங்களின் முதுகில் குத்தி எங்கள் எதிரியுடன் சமரசம் பேசிக்கொள்கிறார். சர்வ வல்லமை படைத்த தனது மீடியாக்களின் உதவியுடன் எங்களின் முதுகில் குத்தியதையே தனது சாதனையாக்கி எங்களின் எலும்புகளின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். அப்பாவி மக்கள் , அதையே உண்மையென எண்ணி அவரைத் தங்கள் சாதனையாளராக நம்பி ஏமாந்து போகிறார்கள். தங்களை நரபலியெடுத்தவனின் கூட்டாளி அவர் என்பதை வரலாறு பதிவு செய்தாலும் கூடவே எமது மக்களுக்கு அச்செய்தி போய்ச் சேருவதே இல்லை. அதன்மூலம் , எமது தமிழ் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க முயல்கிறார்.

தம் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க விரும்பும் யாருமே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியற்றவர்கள். ஆகவே , 60 ஆண்டுகாலம் நாம் தலைவன் என்று சொன்ன ஒருவரை அவரது இறுதிக்காலத்தில் நீங்கள் தலைவனாகவே இருக்க லாயக்கற்றவர் என்று சொல்லும் துர்பாக்கிய நிலைக்கு அவர் நம்மைத் தள்ளி விட்டிருக்க வேண்டாம்…!



ஏனோ இந்த நிலை காழ்ப்புணர்ச்சியாலோ , உணர்ச்சி வேகத்தாலோ எடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் கீழிருக்கும் கேள்விகளை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்

கொல்லப்படுகின்ற எமது இனத்துக்காக முத்துக்குமரனின் வழிகாட்டுதலில் தம்மையே அழித்துக்கொண்டு அழிந்தவர்களின் தியாகத்தையும் , அதன் மூலம் எழுந்த மாணவர் எழுச்சியையும் எம்பிக்களின் ராஜினாமா என்ற நாடகத்தின் மூலமும் , அதிகாரத்தின் மூலமும் கொன்றொழித்தார். அதன் மூலம் தமிழகத்தில் பொங்கியெழுந்த இனவுணர்வினைச் சிதைத்தார்.

எங்களின் இனவுணர்வினை சிதைத்த ஒருவரை எப்படி நாங்கள் தலைவராக ஏற்க முடியும்?

முள்ளிவாய்க்காலில் பாரிய மனித அவலம் ஒன்று நடைபெற்ற போது திடிரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் அமர்ந்து கொண்டார். அன்றும் கூட ஏதாவது மாற்றம் நடந்துவிடாதா என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். ஆனால் அந்த நாடகத்தையும் விரைவில் முடித்து போர் நின்றுவிட்டதாக ப்லிம் காட்டினார். ஆனால் அடுத்த நாளே முள்ளிவாய்க்கால் முழுதுமே தமிழனின் இரத்தம் பரவிச் சிவந்தது. இன்றுவரை அதற்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரில்லை.

தமிழனின் வரலாறு இதுவரை கண்டிராத பாரிய மனிதப் பேரவலத்தைப் பற்றி இன்றுவரை வாய் திறவாத ஒருவரை எங்களில் ஒருவராகவே ஏற்கவியலாது என்ற சூழலில் எங்ஙனம் எங்களின் தலைவர் என்று சொல்வது?

சிங்களனைக் கோபப்படுத்தும் படி பேசி விடாதீர்கள் என்று சொல்லி கதைகதையாக அவர் சொல்லிவந்த புறநானூற்று வரலாற்றை புதைகுழியில் தள்ளிச் சென்றார். ஒட்டுமொத்த தமிழினத்தை கோழையாக்கி குறுகுறுக்க வைத்தார். கோழைத்தனத்தின் வெளிப்பாடாய் வீரத்தையும் , விவேகத்தை இழந்து போனார்.

மனச்சாட்சியுள்ளவர்களே சொல்லுங்கள்……..ஒரு கோழையை எங்களின் தலைவர் என்று நாங்கள் எப்படித்தான் சொல்வது?

அரைலட்சம் மக்களை ஒரே நாளில் பரிகொடுத்துவிட்டு , மூன்று லட்சம் மக்கள் திறந்தவெளிச் சிறையில் பரிதவிக்கும் போது உலகத் தமிழ் மாநாடு எடுத்து உச்சி மகிழ நினைப்பவரை நாங்கள் என்ன சொல்லி அழைப்பது? தமிழனென்றா இல்லை தமிழினத் தலைவரென்றா?

நேற்றும் கூட தமிழகத்து எம்.பிக்களை இலங்கைக்கு அனுப்பினார். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த சனீஸ்வரனின் தூதுவர்கள் என்று வலம்புரி நாளிதழ் வர்ணித்தது. ஆதரவற்று கண்ணீர் மல்கி , போக்கிடம்  தெரியாமல் புலம்பும் மக்களுக்கு நீங்கள் ஆதரவுக் குரல் தராவிடினும் பரவாயில்லை. அதட்டாமல் இருந்தால் போதும். ஆனால் எத்தகைய அணுகுமுறையை இவர்கள் உபயோகித்தார்களளென்பதை உதயன் நாளிதழ் கிழித்தெறிந்து இருக்கிறது.


எவ்வளவு சூழச்சிகரமாக இந்த எம்.பிக்களின் பயணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உணர முடியும்….

தமிழக எம்.பிக்கள் யாழ்ப்பாணம் போனார்கள்….மானிக் பார்ம் போனார்கள்…….மலையகம் போனார்கள்.

இலங்கையில் உட்கார்ந்து கொண்டு ஜே.எம்.ஆரூணும் , சுதர்சன நாச்சியப்பனும் இலங்கை அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும், மலையகம் சொர்க்க லோகமாக மாறிப் போனது என்றும் உலகநாடுகளுக்கு ஒரு சேதி சொன்னார்கள். வெளிக்கிடைக்கும் செய்திகள் பொய்யென்று ஆருண் சொல்லி சிங்களத்துச் சேவகனானார். அது உலகப் பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்தது. சிங்களம் தமிழக எம்பிக்கள் பாராட்டுப் பத்திரம் வாசித்ததாக சொல்லி மகிழ்ந்தது.

ஆனால் , இறுதியாக முதல்வரிடம் கொடுத்த அறிக்கைகள் எம்.பிக்கள் கொடுத்த அறிக்கையில் நேர்மாறான ஒரு நிலையினை எடுத்து வைத்தார்கள். இந்நிலையில் இலங்கையில் மேற்கண்ட பேட்டியினைக் கொடுத்த ஜே.எம்.ஆருணுக்கும் , சுதர்சன நாச்சியப்பனுக்கும் எவ்வித மறுப்பும் கொடுக்கப்படாமை தீவிர நோக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

இலங்கையில் ஒரு நிலை , தமிழகத்துக்கு வந்தபிறகு இன்னொரு நிலை என்று இரட்டை வேடம் போடுவது யார் நலனுக்காக என்பதையும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஆறுமாதங்களில் மக்கள் எல்லோரையும் மீள்குடியேற்றம் செய்யப்போகிறோம் என்று ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வெளிப்படையாகவே மறுக்கும் மகிந்த ராஜபக்சே 58000 மக்களை விடுவிக்க ஒத்துக்கொண்டதாக அகமகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.

துன்பத்தில் உழலும் மக்களில் ஓரிருவர் விடுவிக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே. ஆனால் நேற்று அக்கட்சி சார்பு தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்ததும் நரகலைத் தின்ற உணர்வே மிகுதியானது.

தமிழக அரசின் அயராத முயற்சியால் , 600 தமிழர்கள் விடுவிக்கப்பட்டார்களாம். இந்தச் செய்தியை இவ்வளவு கோலாகலமாக வெளியிடும் இந்தத் தொலைக்காட்சி முள்ளீவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மடிந்த போது எங்கே போயிருந்தது? ஏன் அதை இருட்டடிப்பு செய்தது? இக்கேள்விக்குப் பதிலுண்டா? சரி அதை விடுங்கள். இன்று இலங்கை அரசு 58000 அகதிகளை விடுவிப்பதாகச் சொன்னதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்கிறதே…..போர் நிறுத்தம் போன்றதொரு கண் துடைப்பு அறிவிப்புதானா அது?

எந்நேரமும் ஆட்சி , ஓட்டு , பதவி என்று எழவு கொட்டிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் தமிழர்கள் இருக்கப் போகிறார்களா இல்லை வீரமும் , ஈரமும் நிறைந்த போராட்டம் ஒன்றை நடத்தி உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த போராளிக்கூட்டமொன்றின் வீர மறவர்களுக்கு புகழ் சேர்க்கப் போகிறார்களா என்ற கேள்வியை உங்கள் ஆய்வுக்கு வைத்து விடை பெறுகிறேன்.

கதிரவன் – ழகரத்துக்காக.

1 comment:

Anonymous said...

கட்டுரை நச் கதிரவன்.